அடையாளம் இழந்தவனின் குரல்

 


முதல் நாள் கண்ட போதும்
தெரியவில்லை,
மூன்று ஆண்டுகள் பழகிய போதும்
தெரிந்து கொள்ள மெனக்கெடவில்லை, 

அதிகம் பேசினோம்
அனைத்தும் பேசினோம்
நட்பிலே காதல் தோன்றும்
என சொன்னவன் நிச்சயம்
கற்பனை கவிஞனாக
இருந்திருக்க முடியாது என்று
அன்று தான் முடிவு செய்தேன்,                                                                                                      

ஆம் அவளுக்கும் பிடித்தது
என்னைப்போலவே என் காதலையும்,
அப்போதும் தெரியவில்லை 
அதற்க்கான தேவையும் உருவாகவில்லை.

எப்படி தெரிய வந்திருக்கும்,
சரி சமமாய் அமர்ந்து தான்
கல்லூரி படித்தோம்,
ஒரே நிறுவனத்தில் பணி செய்தோம், 
பழக்கங்கள் பறிமாறினோம்,
பகல் இரவுகள் ரசித்தோம். 

காதலின் காலாண்டு முடியும் முன்னே
இறுதித் தேர்வை அவர்கள் வீட்டில்
ஏற்பாடு செய்வார்கள் என்று
நான் கனவிலும் எதிர்பார்க்கவும் இல்லை,
எதிர்பார்க்க பக்குவப்படவும் இல்லை. 

காதல் வகுப்பில் சேர்ந்த பின்பு
தேர்வை எழுதாமல் தாழ்த்துபவன்,
படிக்கவே லாயிக்கு இல்லாதவன்
என்ற வயதின் விமர்சனத்திற்கு நம்பிக்கை பிறக்கவே, 
கேள்வி என்னவென்று பார்ப்போம் முடிவுகள் 
கிடக்கட்டும் என்று புறப்பட்டேன் நானும். 

திருவிழாவாய் கூடியிருந்த வீட்டிற்குள்
நுழையும் வரை தெரியவில்லை
நான் தான் விழாவின் நாயகன் என்று,
மகிழ்ச்சிக்கான தடமும் 
அன்பிற்கான இடமும் தெரியாத முகங்களோடு 
கூடி இருந்தவர்களிடம்
இசைவான பதிலை எதிர்பார்ப்பது,
நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்வதை 
போன்ற கனவு தான் என்று.

என்னை பற்றி கேட்கும் முன்,
என் அப்பாவின் பெயரையும், ஊரையும்,
தொழிலையும் கேட்ட போது வந்த சந்தேகம்,
பதில் சொன்னவுடன் அவர்கள் முகத்தில் 
ஏற்பட்ட மாற்றத்தில்  உறுதியானது,
இவர்கள் இன்னும் ஒரு தலைமுறைக்கு பின்னால் 
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று. 

"இந்த பயலுக்கு என்னடா சகவாசம் நம்ம பொண்ணு கூட, 
கை நெறைய சம்பாதிச்சா எல்லாம் சரி சமம் ஆகிடுமா, 
இல்ல சரி சமமா வேலை பாத்தா நம்ம அந்தஸ்து வந்துருமா, 
தகுதிக்கும் தராதரத்துக்கும் ஒரு வித்தியாசம் வேணாம், 
ஒன்னா படிச்சாலும் ஒண்ணா சுத்துனாலும் 
கழுதைக்கும் குதிரைக்கும் வித்தியாசம் வேணாம், 
அரசாங்க உத்தியோகம் பாக்குற மாப்ளய பாத்து 
கட்டி வைக்கலாம்னு புள்ளைய பொத்தி வளத்தா, 
இது என்ன இழவ இழுத்துட்டு இருக்கு

என பல பழமையான பேச்சுகள் இன்னும் 
அந்த கற்பனை கோட்பாட்டை தூக்கி திரிவதை 
மரியதையின் அடையாளம் ஆக மாட்டிக்கொண்டு திரிவதை  
கேட்கும் இடத்தில் தான் இருக்க முடிந்தது என்னால்,                                                                               
அவளின் விருப்பம் தாண்டி 
இவர்களை இப்படி பேச வைக்கும் அதிகாரம் 
அந்த கோட்பாட்டிற்கு யார் தந்தது 
என யோசிக்க கூட நேரமில்லை.

"தம்பி இதெல்லாம் சரி பட்டு வராது, 
பாப்பா சொன்னதால என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்னு 
வர சொன்னோம், தாயா புள்ளையா பழகுனாலும் வாயும் வயிறும் வேற இல்லையா, 
பழக்க வழக்கம் னு ஒன்னு இருக்கு இல்லையா, தம்பிக்கு புரிஞ்சிருக்கும்னு  நம்புறேன்
கண்கள் கோப கணலில் இருந்தாலும், 
பெண்ண பெத்த பாவத்துக்கு உதடுகளை 
பொறுமையாக அசைக்க வேண்டிய பொறுப்போடு 
என் தேர்வு முடிவை அவள் அப்பா அறிவித்துவிட்டார். 

பதில் சொல்லி விளக்க என்னிடம் 
வார்த்தைகளும் காரணங்களும் 
வலுவாக இருந்த போதும், 
வலுவிழந்த காதுகளிடமும், 
தயாராகவும், தகுதியாகவும் 
இல்லாதவர்களிடம் 
விளக்க இடமும் இல்லை பொருளும் இல்லை,
ஏவல் மட்டும் இருந்தது எனை கிளப்ப சொல்லி. 
ஏதும் சொல்லாமல் எழ முயன்றேன்
காதில் விழுந்த அவளின் கதறல் சத்தத்தில் 
நடுங்கிய உதடுகள், பேச துவங்கின என்னை அறியாமல்,
 "அவள் விவரம் அறியாதவள், 
உங்க மேல உயிரையே வச்சிருக்கா, 
உங்கள தாண்டி எதுவும் பண்ண மாட்டா, 
நானும் அந்த நம்பிக்கையை உடைக்க விரும்பல, போறேன்!" 

திரும்பி பார்க்க திசையின்றி,
கண்களை குருடாக்கி கொண்டு,
செவிகளை செவிடாக்கி கொண்டு,
நகர்ந்தேன்,
அவளை சேர்ந்தால்
வாழ்க்கை கடந்துவிடும்,
இல்லை,
கடந்துவிடும் வாழ்க்கை,
இந்த வேறுபாட்டின் புள்ளியில்
கேட்கின்றேன், என் அடையாளத்தை,
நான் யார்?

Comments

Popular Posts